சுந்தரமூர்த்தி சுவாமிகள் தேவாரம்
ஏழாம் திருமுறை
7.35 திருப்புறம்பயம்
பண் - கொல்லி
அங்கம்ஓதியோர் ஆறைமேற்றளி
    நின்றும்போந்துவந் தின்னம்பர்த்
தங்கினோமையும் இன்னதென்றிலர்
    ஈசனாரெழு நெஞ்சமே
கங்குல்ஏமங்கள் கொண்டுதேவர்கள்
    ஏத்திவானவர் தாந்தொழும்
பொங்குமால்விடை யேறிசெல்வப்
    புறம்பயந்தொழப் போதுமே.
1
பதியுஞ்சுற்றமும் பெற்றமக்களும்
    பண்டையாரலர் பெண்டிரும்
நெதியிலிம்மனை வாழும்வாழ்க்கையும்
    நினைப்பொழிமட நெஞ்சமே
மதியஞ்சேர்சடைக் கங்கையானிடம்
    மகிழும்மல்லிகை செண்பகம்
புதியபூமலர்ந் தெல்லிநாறும்
    புறம்பயந்தொழப் போதுமே.
2
புறந்திரைந்து நரம்பெழுந்து
    நரைத்துநீயுரை யாற்றளர்ந்
தறம்புரிந்து நினைப்பதாண்மை
    அரிதுகாண்இஃ தறிதியேல்
திறம்பியாதெழு நெஞ்சமேசிறு
    காலைநாமுறு வாணியம்
புறம்பயத்துறை பூதநாதன்
    புறம்பயந்தொழப் போதுமே.
3
குற்றொருவரைக் கூறைகொண்டு
    கொலைகள்சூழ்ந்த களவெலாஞ்
செற்றொருவரைச் செய்ததீமைகள்
    இம்மையேவருந் திண்ணமே
மற்றொருவரைப் பற்றிலேன்மற
    வாதெழுமட நெஞ்சமே
புற்றரவுடைப் பெற்றமேறி
    புறம்பயந்தொழப் போதுமே.
4
கள்ளிநீசெய்த தீமையுள்ளன
    பாவமும்பறை யும்படி
தெள்ளிதாவெழு நெஞ்சமேசெங்கண்
    சேவுடைச்சிவ லோகனூர்
துள்ளிவெள்ளிள வாளைபாய்வயல்
    தோன்றுதாமரைப் பூக்கள்மேல்
புள்ளிநள்ளிகள் பள்ளிகொள்ளும்
    புறம்பயந்தொழப் போதுமே.
5
படையெலாம்பக டாரஆளிலும்
    பௌவஞ்சூழ்ந்தர சாளிலுங்
கடையெலாம்பிணைத் தேரைவால்கவ
    லாதெழுமட நெஞ்சமே
மடையெலாங்கழு நீர்மலர்ந்து
    மருங்கெலாங்கரும் பாடத்தேன்
புடையெலாம்மணம் நாறுசோலைப்
    புறம்பயந்தொழப் போதுமே.
6
முன்னைச்செய்வினை இம்மையில்வந்து
    மூடுமாதலின் முன்னமே
என்னைநீதியக் காதெழுமட
    நெஞ்சமேயெந்தை தந்தையூர்
அன்னச்சேவலோ டூடிப்பேடைகள்
    கூடிச்சேரு மணிபொழிற்
புன்னைக்கன்னி கழிக்காணாறும்
    புறம்பயந்தொழப் போதுமே.
7
மலமெலாமறும் இம்மையேமறு
    மைக்கும்வல்வினை சார்கிலா
சலமெலாமொழி நெஞ்சமேயெங்கள்
    சங்கரன்வந்து தங்குமூர்
கலமெலாங்கடல் மண்டுகாவிரி
    நங்கையாடிய கங்கைநீர்
புலமெலாம்மண்டிப் பொன்விளைக்கும்
    புறம்பயந்தொழப் போதுமே.
8
பண்டரியன செய்ததீமையும்
    பாவமும்பறை யும்படி
கண்டரியன கேட்டியேற்கவ
    லாதெழுமட நெஞ்சமே
தொண்டரியன பாடித்துள்ளிநின்
    றாடிவானவர்தாந் தொழும்
புண்டரீக மலரும்பொய்கை
    புறம்பயந்தொழப் போதுமே.
9
துஞ்சியும்பிறந் துஞ்சிறந்துந்
    துயக்கறாத மயக்கிவை
அஞ்சிஊரன் திருப்புறம்பயத்
    தப்பனைத்தமிழ்ச் சீரினால்
நெஞ்சினாலே புறம்பயந்தொழு
    துய்துமென்று நினைத்தன
வஞ்சியாதுரை செய்யவல்லவர்
    வல்லவானுல காள்வரே.
10
திருச்சிற்றம்பலம்

மேலே செல்க

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com